பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்னா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-

‘‘மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மற்ற மாநிலங்களை விட, பீகார் அதிக விலைக்கு மின்சாரம் பெறுகிறது. நாங்கள் அதிக விலையில் மின்சாரத்தை வாங்குகிறோம் ஆனால், எங்கள் நுகர்வோருக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குகிறோம். நாடு முழுவதும் ஒரே சீரான மின்விகிதம் இருக்க வேண்டும்.

இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பீகார் மாநிலத்தில் மின் நுகர்வோருக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. 2005ல் பீகார் மாநிலத்தில் மின் நுகர்வு வெறும் 700 மெகாவாட்டாக இருந்தது. தற்போது, 6,738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மின் மீட்டர்களை பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.2018 அக்டோபரில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பை அரசாங்கம் உறுதி செய்தது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal