தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ப்ரியாவின் மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை அரசியலாக யாரும் பார்க்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

17 வயதான மாணவி பிரியா ஓராண்டிற்கு முன்னால் கால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் இரண்டு வாரத்திற்கு முன்பாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆர்த்தோஸ்கோபி என்று சொல்லப்படும் சிகிச்சையை பெற்றிருக்கிறார். மருத்துவர்கள் கட்டுப் போட்டதில் ரத்த ஓட்டத்தை கொஞ்சம் தடுத்திருக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்பட்டு உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நானும், துறையின் செயலாளரும் நேரில் பார்த்தோம். பிரியா குணமடைந்து வீடு திரும்பிய உடன் பெங்களூருவில் இருந்து பேட்டரி கால் வாங்கி தருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி அரசு வேலை வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது பெற்றோரிடம் கூறினோம்.

இதையடுத்து குழு ஒன்று அமைத்து விசாரணையில் ஈடுபட்டோம். அதில் மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது. உடனே அவர்கள் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். இதற்கு முன்பு அந்த இரண்டு மருத்துவர்களும் செய்த ஆர்த்தோஸ்கோபி சிகிச்சை நல்ல முறையில் தான் இருந்துள்ளது. எந்தவித சிக்கலும் எழவில்லை. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல மாட்டோம். இதனை யாரும் அரசியலாக பார்க்க கூடாது. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் செயலை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

By Divya