திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா(வயது 30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நாகபிரியாவும், திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சின்னசாமி பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், சின்னசாமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்னசாமி நாகபிரியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதற்கிடையே சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகபிரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் சின்னசாமிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு இன்று காலை வந்தார்.

சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்தார். இதனால் சின்னசாமிக்கு நடைபெற இருந்த திருமணம் நடைபெறாமல் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணமக்கள் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாகபிரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் போலீசார் பேசி திருமணத்தை நிறுத்தினர்.

பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை ஆசிரியை தடுத்து நிறுத்திய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal