காமராஜரைப் பற்றி திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு த.மா.கா தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, “பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். இன்று வரை அனைவரும் காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையைத் தான் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசினார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக நிர்வாகி காமராஜர் பற்றி இப்படிப் பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைவதன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். இந்நாட்டையே வீடாகவும், மக்களையே குடும்பமாகவும் நினைத்து வாழ்ந்த தவயோகி.

நாடும், நாட்டின் மக்களின் வளர்ச்சியே தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர். சுய விளம்பரத்திற்காக எந்த காரியத்தையும் காமராஜர் செய்ததில்லை. அப்படி கேட்டவர்களை என் தாய் நாட்டிற்காக செய்ததை நான் ஏன் வெளிச்சம் போட்டு காட்டனும் என்று திருப்பி கேட்டவர். எதற்காகவும், யாருக்காகவும், வரம்பு மீறி பேசியதில்லை. நாகரிகமில்லா வார்த்தைகளைப் பேசுவது பெருந்தலைவரின் பழக்கமும் இல்லை.

இப்படி பல அருங்குணங்களை கொண்ட பெருந்தலைவரை தி.மு.கவின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினர், காமாராஜர் திமுகவினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்று பேசினார் என்று கூறியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெருந்தலைவரை நேசிப்பவர்களும், அவர்களது பெயரை சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை செய்து எல்லோருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவரைப்போல் தகுதியான தலைவர்கள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கதில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal