சேலத்தில் 90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கொத்தப்புளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள். இவர் வயது 90 ஆகும். அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர், இவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மூதாட்டியை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதையும், அவரிடம் தொடர்ந்து வம்பிழுப்பதையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் நாகம்மாள் வீட்டிற்கு வெளியில், படுத்திருந்தபோது அவ்வழியாகச் சென்ற கிருஷ்ணன் மூதாட்டியை ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டே சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மூதாட்டி பாப்பாயியும் கிருஷ்ணனைப் பதிலுக்குத் திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கிருஷ்ணன், திட்டிக்கொண்டே மனித மலத்தை எடுத்து மூதாட்டியின் முகத்தில் பூசி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம்போட்டு கத்தவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் மீது மனிதக் கழிவை பூசிய கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal