தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனைய ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கைக்கு தெற்கே உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதியில் மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal