காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், அக்., 17ல் நடக்க உள்ளது. இதற்கு முறைப்படியான அறிவிப்பு, நேற்று(செப்.,20) வெளியிடப்பட்டது. வரும், 24 – 30ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அக்., 1ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற, அக்., 8 கடைசி நாளாகும். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்., 17ல் தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள், அக்., 19ல் வெளியிடப்படும். இந்த தேர்தலில், காங்கிரஸ் நிர்வாகிகள், 9,000க்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க உள்ளனர்.

கடந்த, 1998ல் இருந்து காங்கிரஸ் தலைவராக சோனியா உள்ளார். இடையில், 2017 – 2019ல் அவருடைய மகன் ராகுல் தலைவராக இருந்தார். இதற்கு முன், 2000 நவ.,ல் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், சோனியாவை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இதன் வாயிலாக, 22 ஆண்டுகளுக்குப் பின், கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. முன்னாள் தலைவர் ராகுலை தலைவர் பதவியை ஏற்கும்படி மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதை அவர் நிராகரித்துள்ளார். தன் குடும்பத்தினர் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ‘ஜி – 23’ எனப்படும் அதிருப்தி குழுவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோனியாவையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். ராஜஸ்தான் முதல்வராக உள்ள மூத்த தலைவர் அசோக் கெலாட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவர் அதிகாரப்பூர்வமாக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும், சோனியா மற்றும் ராகுலின் ஆதரவு இவருக்கு உள்ளது. இதனால், கெலாட் மற்றும் சசிதரூர் இடையே போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அசோக் கெலாட் பேசும்போது, ‘‘ காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளேன். தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்தினருக்கு ஆசையில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் வலிமையான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, சோனியா மற்றும் அஜய்மக்கான் ஆகியோர் முடிவு செய்வார்கள்’’ என்றார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal