தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போதை பொருள் விற்பனையை ஒழிக்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா பயிர்களை பயிரிடுகிறார்கள். பின்னர் அவற்றை அறுவடை செய்து பொடியாக்கி சென்னைக்கு கடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சிலர் சென்னையில் தங்கி இருந்து இந்த கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள். போலீசார் அதிரடி வேட்டை நடத்தி அவர்களை கைது செய்து வருகிறார்கள். ஏற்கனவே கஞ்சாவை சாக்லெட்டுக்குள் கலந்து சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள பெட்டிகடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்கப்பட்டு வந்தது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அதை கட்டுப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் கேக்கில் கஞ்சா கலந்து விற்பனை செய்யும் புதிய யுக்தியை கஞ்சா வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் விஜய்ரோஷன் டேக்கா, பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் இருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஓட்டல் அதிபரான விஜய்ரோஷன் கஞ்சா கலந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட கேக்குகளை கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் ஓசையின்றி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த கேக்குகளை வாலிபர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோரும் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். கஞ்சாவை கேக்குடன் கலந்து சாப்பிடும் போது கஞ்சா வாசனை வராது. கேக் சாப்பிடுவது போலவே இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் தான் போதை ஏறும். இதனால் அந்த பழக்கத்துக்கு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பலர் அடிமையாகி உள்ளனர். இந்த கஞ்சா கலந்த கேக்கை, கேக் வியாபாரி ஒருவர் வீட்டில் வைத்து தயாரித்து விஜய ரோஷனுக்கு கொடுத்துள்ளார். வழக்கமாக கேக் தயாரிக்கும் போது உள்ள நடைமுறையை பயன்படுத்தி அதற்கான எசன்ஸ் உள்ளிட்ட பொருட்களில் கஞ்சா பொடியை கரைத்து கஞ்சா கேக் தயாரித்துள்ளார்.

ஓட்டல் அதிபர் விஜய ரோஷன் அதை தனக்கு தெரிந்தவர்களுக்கும், ஓனர்களுக்கும் கொடுத்துள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கேக் விலை ரூ.1000 இருக்கும். ஆனால் அந்த வியாபாரி இந்த கேக்கை 2 மடங்கு விலை வைத்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அதை விஜய ரோஷன் சிறிய துண்டுகளாக்கி கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு விற்றுள்ளார். 150 கிராம் எடை கொண்ட கேக்கை ரூ.500 வரை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து விஜய ரோஷன், தாமஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் கூட்டாளிகள் கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கஞ்சா கேக் தயாரித்து கொடுத்த கேக் வியாபாரியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை பிடிக்கும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal