பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்ட சபையில் பேசியதோடு, அதனை படிப்படியாக நடைமுறைப் படுத்தியும் வருகிறார்.

அதே போல், பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான திட்டங்களை புகுத்தி மாணவர்கள் மற்றும் ஆசியரியர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இந்த நிலையில்தான், ‘‘மாணவர்களின் குறைகளை ஆன்லைன் மூலம் கேட்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்’’ என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்!

கோவை மாவட்டம், சூலூர் அருகே கே.பி.ஆர்., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, ‘‘ ஆசிரியர்களின் கோரிக்கை கள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசாணைகள், 101 மற்றும் 108ல் திருத்தங்கள் செய்யப்பட்டு, முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களின் குறைகளை கேட்க ‘மாணவர் மனசு’ திட்டம் உள்ளது. அதே போல், ஆசிரியர்களின் குறைகளை கேட்க, ‘ஆசிரியர் மனசு’ எனும் பெட்டி, பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திலும், என் வீட்டிலும் வைக்கப்படும்.

அதன்மூலம் வரும் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். மாணவர்களின் கலை, பண்பாட்டு திறமைகள் ஒருங்கிணைக்கப்படும். மாற்றுத்திறன் மற்றும் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, வீட்டு வழி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். ஆன்லைன் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal