திருமண பந்தத்தை மீறி வேறு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த பெண், மத்திய பிரதேச மாநிலத்தில் ஊர் முன்னிலையில் ஆடை கிழித்து மானபங்கப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார். அத்துடன் அவரது கணவரை ஊர் முழுவதும் ஊர்வலமாக தோளில் சுமக்க வைத்து அவரது மனைவிக்கு தண்டனையும் வழங்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள போர்பதாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கிலால். இவரது மனைவிக்கு 33 வயதாகிறது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்கிலால் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தேடிய போது இன்னொருவரின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. திருமணத்தை மீறிய உறவு அவர்களுக்குள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மங்கிலாலின் உறவினர்கள், அவரது மனைவியை ஊர் முன்னிலையில் பெல்ட்டால் தாக்கினர். அத்துடன் அவரது ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தினர். மங்கிலாலும் சேர்ந்து தனது மனைவியைத் தாக்கினார். மேலும் மங்கிலாலை அவரது மனைவியின் தோளில் ஏற்றி ஊர் முழுவதும் சுமக்க வைத்தனர். இவர்கள் பின் ஊரே ஊர்வலமாகச் சென்றுள்ளது.

இதுகுறித்து பிலாலா என்ற பெண்ணின் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த பெண்ணை மீட்டனர். அவரது கணவர் மங்கிலால் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிந்து அனைவரையும் நேற்று கைது செய்தனர். மற்றவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று டிஎஸ்பி சூர்யகாந்த் சர்மா கூறியுள்ளார். பெண் தாக்கப்பட்டு கணவனை தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருவதால் மாநிலம் முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal