போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்து, இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வங்கி மேலாளர் வசமாக சிக்கியிருக்கும் சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு அனுமந்தநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிசங்கர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும்.

அதே வங்கியில் அனிதா என்பவர் ரூ.1 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருந்தார். மேலும், இந்த டெபாசிட் தொகையை வைத்து அவர் 75 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக அனிதா பல்வேறு ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் தனது ஆவணங்களைத் தவறாக பயன்படுத்தி பல கட்ட தவணைகளாக 5.7 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளது அனிதாவுக்குத் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் மோசடி சம்பவங்கள் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. மே மாதம் 13-ந் தேதியிலிருந்து 19-ந் தேதி வரை அனிதாவின் டெபாசிட் தொகை மூலமாக அவரது பெயரில் 5.70 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றிருப்பதும், அந்த பணம் பெங்களூருவில் உள்ள வங்கியிலிருந்து கர்நாடகத்தில் உள்ள 2 வங்கிகளுக்கும், மேற்கு வங்காளத்திலுள்ள 28 வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் வங்கி மேலாளர் ஹரிசங்கர் இந்த கையாடலில் ஈடுபட்டது உறுதியானது.

இதுதொடார்பாக அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்துள்ளனர். அவரிடம் முதலில் நடத்திய விசாரணையில், ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்வதற்காகவும், அவர் கேட்டதால் ரூ.5.70 கோடியையும் அனுப்பி வைத்தாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், ஹரிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஹரிசங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் கேரளாவில் தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக முதலில் ஒரு இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளார். அதன் பிறகு பல பெண்களுக்கு எராளமாக பணங்களை கொட்டிக் கொடுத்து உல்லாசமாக இருந்தது தெரியவந்திருக்கிறது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal