பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனை கண்டித்த மனைவி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவினாஷ், கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினர் பாலக்காட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவினாஷ் விடுமுறையில் ஊருக்கு வந்தார். மனைவி-மகனுடன் சந்தோஷமாக அவர் பொழுதை கழித்து வந்தார். சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்த அவினாஷ், தனது மகனுக்கு முத்தம் கொடுத்தார். அப்போது அவரது மனைவி தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என கணவரை கண்டித்தார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அவினாஷ், கத்தியால் மனைவி தீபிகாவை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவினாசை கைது செய்தனர். முத்தப் பிரச்சினையில் மனைவியை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal