‘தமிழகத்தில் இரு ஆளுமைகள் மறைந்து விட்ட நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது’ என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புதிய அணுகுண்டை வீசியிருக்கிறார்.

பாஜக மகளிரணி மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கோவை தனியார் ஹோட்டலில் நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மகளிரணி மாநில தலைவர் உமாரதி, விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி. கே. நாகராஜ், பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, ‘‘தமிழகத்தில் ஆளுமைகள் மறைந்துவிட்டதால் அரசியலில் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. அதுவும் மகளிருக்கு வெற்றிடம் அதிகமாக உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘அரசியல் வடிவமைப்பு மகளிரை மையமாக வைத்து தான் உள்ளது. மகளிர்கள், வாக்குச்சாவடியில் பாஜகவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளனர். மக்களிடம் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் மோடியை அசைக்க முடியாது.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மகளிர் அணியில் புதுமையான விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழக மக்களுக்கு உள்ளது. இந்தியாவில் தமிழக மகளிர் அணி முதல் இடத்திற்கு வரவேண்டும். அதுதான் வானதி சீனிவாசனுக்கு பெருமை சேர்க்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய சரித்திர மாற்றத்தை இந்த அணி ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை’’ என்றவர், ‘’மகளிர்க்காகத்தான் மத்திய அரசின் 90 சதவிகித திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன’’என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal