மறைந்த முதலமைச்சர் கலைஞர் இருக்கும்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் பங்பேற்பதுதான் வழக்கம்.

ஆனால், இன்றைக்கு அவர் மறைந்துவிட்டார்… அவரது சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராசாத்தி அம்மாளை, முதல்வர் ஸ்டாலின் வாஞ்சையுடன் வரவேற்று தனதருகில் அமரவைத்துக்கொண்டார். இந்நிகழ்வுதான் ராசாத்தி அம்மாளை மிகவும் நெகிழவைத்துவிட்டது.

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

எம்ஜிஆர் மறைவின் போது அண்ணா சாலையில் தகர்க்கப்பட்ட கருணாநிதியின் சிலை 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைத் திறப்பு விழாவிற்கு மகள் கனிமொழி எம்பியுடன் ராசாத்தி அம்மாள் வருகை தந்தார். ராசாத்தி அம்மாள் முதல் வரிசையில் முதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் கனிமொழி, தமிழரசு, செல்வி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். முன்னதாக இந்த விழாவில் வருகை தந்த ராசாத்தி அம்மாளை முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஸ்டாலின் வெற்றி பெற்ற பிறகும் சரி, முதல்வராக பதவியேற்ற போதும் சரி ராசாத்தி அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அது போல் தனது பிறந்தநாளின் போது கோபாலபுரத்தில் தயாளு அம்மாளிடம் ஆசி வாங்குவதை போல் சிஐடி காலனி வீட்டில் உள்ள ராசாத்தி அம்மாளிடமும் ஸ்டாலின் ஆசி வாங்குவார். கருணாநிதியின் பிறந்த நாளன்றும் சிஐடி காலனியில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்த் தூவி அஞ்சலி செலுத்துவார்.

இந்த விழாவிற்கு வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ராசாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்தார். கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஆகியோரை வெங்கய்ய நாயுடு அழைத்து அருகே நிற்க வைத்துக் கொண்டார். கருணாநிதியின் சிலைக்கு மலர்த தூவி மரியாதை செலுத்தினர்.

தந்தை சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டவராகவே இருந்ததை உணர முடிந்தது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal