சீனர்களுக்கு சட்டவிரோதமாக, ‘விசா’ வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்ட விரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்துள்ளார். இதற்காக, ரூ.50 லட்சம் லஞ்சம் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவரை டில்லி சி.பி.ஐ., கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையடுத்து, முதல் குற்றவாளி பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளி கார்த்தி சிதம்பரம் மீது டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சென்னை, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், 18 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக விசா பெறுவது பற்றி, சீன நாட்டினருடன் பாஸ்கரராமன், தகவல் பரிமாற்றம் நடத்தியதற்கான ஆதாரங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில் விசா மோசடி விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கார்த்தி சிதம்பரம் எந்த நேரமும் கைதாகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

விரைவில் கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal