சமாதியில் இருந்து மக்களுக்கு வரங்களை கொடுப்பேன்- நித்யானந்தா புதிய பதிவு போட்டிருப்பதுதான், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிநாடு தப்பி ஓடி கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சமீபத்தில சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவியது. இதையடுத்து நித்யானந்தா வெளியிட்ட பதிவில், என் உடல்நிலை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. நான் சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக நித்தியானந்தா வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘‘எனக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு விட்டது. அதில் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை, தூக்கம் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் அவர் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி ‘கவரேஜ்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் சமாதியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.

வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது. உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது. அதனால் தான் வெளிப்புற உணவு இல்லை. அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.

நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும். நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன்.

நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள். ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொவருராக பார்க்கிறேன்’’இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal