‘நீ தான் என் உலகம்… வாழ்ந்தால் உன்கூடதான் வாழுவேன்… உன் கூட வாழ்ந்த வாழ்க்கையை நான் யார் கூடவும் ஷேர் பண்ண மாட்டான்’ என்று 3 பக்கத்திற்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு காதலன் வீட்டில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் கள்ளக்குறிச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா (24). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து முடித்தார்.

இந்நிலையில் ரிஷிவந்தியம் அடுத்த நூரோலை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ஆகாஷ் என்பவரும், சுதாவும் காதலித்து வந்தனர். சித்தேரிபட்டு அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது இருவரும் காதலிக்க துவங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலன் ஆகாஷ், சுதாவிற்கு போன் செய்துள்ளார் அப்போது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த ஆகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதா மனம் உடைந்தார். இதற்கிடையே சுதாவின் பெற்றோர் அவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதில் சுதாவுக்கு விருப்பம் இல்லை. இதுபற்றி சமூகநல அலுவலரிடம் தகவல் கூறி திருமணத்தை நிறுத்தினார். அதன்பிறகு சிறிது நாட்கள் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்தார்.

இந்நிலையில் சமூகநல அலுவலரிடம் காதலன் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு காதலன் வீடான நூரோலை கிராமத்துக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த சுதா, ஆகாஷ் இறப்பால் மனம் உடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அடிக்கடி பேசி வந்துள்ளார்.

மே 17ல் திடீரென்று அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (21-&தேதி) சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சுதா எழுதிய 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னால் என் மாமா இல்லாத லைஃபை பற்றி நினைக்க முடியல. அவனோட இடத்தை யாருக்கும் கொடுக்க முடியல. அவன் கூட வாழ்ந்ததை மறக்க முடியல. அவன் தான் என்னோட வாழ்க்கை. அவன் தான் கடைசி வரைக்கும் என் புருஷன். உன் கூட இருந்த வாழ்க்கையை என்னால யார் கூட ஷேர் பண்ண முடியாது. நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம். நீ மட்டும் தான் என்னோட உலகம். நீ இந்த உலகத்தை இல்லாம நான் எதுக்கு இருக்கணும்.

அப்பா, அம்மா, தம்பி, பாப்பா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னோட மாமா இல்லாமல் எனக்கு வாழ புடிக்கல. என்னை என் மாமா கூடவே அடக்கம் பண்ணுங்க ப்ளீஸ். அப்பா அவன் கூட வாழத்தான் முடியல. ஒன்னா அடக்கம் பண்ணுங்க அவன் கூட வாழ்ந்தது, பேசினது, பழகினது எதையும் மறைக்க முடியல. வேற ஒருத்தரோட ஷேர் பண்ண முடியல. மன்னிச்சிடுங்க ப்ளீஸ்’’ என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

இதுபற்றி ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal