தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (மே 6) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று( மே 05) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இடி மின்னல் சமயத்தில் தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2, – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 37 மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 6ம் தேதி ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கூடும். இது வட மேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கும், நாளை அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கும், 07,08,09 ல் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal