‘சட்டசபையில் திமுக எம்எல்ஏ.,க்கள் பேசுகையில் என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஏப்.,7) நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில், கேள்வி நேரத்தின் போது, ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சண்முகையா, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேச்சை துவக்கினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.

இடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘நான் ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதும், ஆளும்கட்சியாக இருக்கும்போதும் சொல்லியிருக்கிறேன். கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். புகழ்வதற்கோ, பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் திமுக உறுப்பினர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள்’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal