கிழக்கு திசை காற்று மற்றும் காற்றழுத்த பகுதிகளால் ஏற்பட்ட மழை முடிவுக்கு வந்து, நேற்றுமுதல் கோடை வெயில் துவங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பிப்ரவரி முதல் வாரத்தில் முடிந்தாலும், வடகிழக்கு பருவக்காற்று தொடர்ந்து வீசியது. மாநிலத்தின் பல பகுதிகளிலும், அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இதுவரை இல்லாத வகையில், 84 ஆண்டுகளுக்கு பின், வங்கக் கடலில் மார்ச்சில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த மண்டலம், தமிழக கரையை நெருங்கும்போது வலுவிழந்தது.அதனால், கடந்த சில தினங்களாக, டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த மழை, நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.

இந்த ஆண்டுக்கான கோடை கால வெயில், நேற்று துவங்கியது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், முந்தைய நாட்களை விட, நேற்று வெப்பநிலை அதிகரித்தது. கோடை வெயிலின் தாக்கம், இந்த ஆண்டு இயல்பை விட குறைவாக இருக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் வரும் 11ம் தேதி வரை, வறண்ட வானிலையே நிலவும். வரும், 12ம் தேதி தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மதிய நேரங்களில், உடல்நலனை கருத்தில் கொண்டு வெளியில் செல்வதை தவிர்க்கவும். அப்படியே வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், குடை மற்றும் குடிநீரை உடன் எடுத்துச் செல்வது அவசியம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal