தமிழகத்தில் கடந்தாண்டு மழைக் கொட்டித் தீர்த்தது. சென்னையை மிதக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான் வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அதி கன மழைக்கான, ‘ரெட் அலெர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது. 84 ஆண்டுகளுக்கு பின், கோடை காலத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ‘‘தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இது, மேலும் வலுப்பெற்று, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழையும் கன மழையும் பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். வரும் 6ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக கன மழையும்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு குறைவு. ஆழ்ந்த மண்டலமாக மாறி வலுவிழக்கும். தமிழக பகுதிகளில் அதி கன மழைக்கான, ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் நாடு முழுதும் கோடை காலம். இந்த கால கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மிக அரிதாகவே ஏற்படும். கடந்த 1938ம் ஆண்டில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தற்போது 84 ஆண்டுகளுக்கு பின் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

அதேபோல, 1994 மார்ச்சில் அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறவில்லை. இந்த ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளை விட, வெப்பம் குறைவாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம் அறிவித்து உள்ளது. அதேபோல, தென் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட குறைய வாய்ப்புள்ளது’’இவ்வாறு அவர் கூறினார்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழக வடக்கு கடலோரம், தெற்கு ஆந்திர கடலோரத்தில் இன்றும்; மத்திய மேற்கு, தென் மேற்கு வங்கக்கடல், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளையும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம். வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வரும் 6ம் தேதி மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் உடனே கரை திரும்ப வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கோடைக்காலத்தில் புயல் சின்னம் உருவாகியிருப்பதுதான், பருவநிலைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சமும் ஒருபுறம் ஏற்பட்டிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal