இளம் பெண்ணை நான்கு ஆண்டு காதலித்து, 5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் வாங்கி பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காரைக்கால் எம்.பி.ஏ., பட்டதாரியை, போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த 23 வயது பெண், ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். கட்டடத்தின் முதல் மாடியில், காரைக்கால், பூவம், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த தினகரன், 24; கிருமாம்பாக்கம் கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். இருவரும் 2018 முதல் காதலித்தனர். தினகரன் காதலி வீட்டாரை சந்தித்து, திருமணம் குறித்து பேசியுள்ளார். படிப்பு முடிந்ததும், திருமணம் செய்து கொடுப்பதாக கூறி உள்ளனர்.
இதற்கிடையே, இறுதியாண்டு கல்லூரி கட்டணம் செலுத்த 40 ஆயிரம் ரூபாய் உட்பட பல்வேறு காரணங்களை கூறி, காதலியிடம் 4 லட்சம் ரூபாயை தினகரன் வாங்கினார்.கடந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக காதலியிடம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு ‘ஐபோன்’ வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் காரைக்கால் சென்ற தினகரன், பிப்ரவரி 3ம் தேதி வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையறிந்த காதலி அதிர்ச்சி அடைந்து, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். தினகரன் மீது ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.