இனி வருங்காலங்களில் அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் தி.மு.க.வில் இணைந்து விடுவார்கள். அ.தி.மு.க என்ற இயக்கமே இருக்காது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். அது ரத்தத்தின் ரத்தங்களை சூடேற்றியது.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் அ.தி.மு.க. இருக்காது என்றும், அது தி.மு.க.வில் சங்கமமாகி விடும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. தி.மு.க. என்பது ஒரு குடும்பக்கட்சி. ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால், அ.தி.மு.க. என்பது மாபெரும் மக்கள் இயக்கம். கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய்கலக்காது என்பதை அவருக்கு முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போதும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை அமைத்த போதும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், ‘தம்பி வா, தலைமை ஏற்க வா’ என்று பேரறிஞர் அண்ணவால் அழைக்கப்பட்டவருமான இரா. நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, ப. குழந்தைவேலு ஆகியோர் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், கோடிக்கணக்கான தொண்டர்கள் அ.தி.மு.க.வில் ஐக்கியமானதையும், தி.மு.க. கூடாரமே காலியானதையும், அதற்கு பிறகு 13 ஆண்டுகள் தி.மு.க. வனவாசம் இருந்ததையும், கூட்டுறவுத்துறை அமைச்சர் மறந்துவிட்டார் போலும்.

சிறிய மாநகராட்சிகளையாவது அனைத்திந்திய அ.தி.மு.க. கைப்பற்றி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான். சென்னை உயர் நீதிமன்றத்திடமிருந்தே ‘நற்’ சான்றிதழ் பெற்றகட்சி தி.மு.க. தேர்தல் நடைபெற்ற விதம் அ.தி.மு.க.வினருக்கு நன்கு தெரியும் என்பதால் இதில் கட்சியினருக்கு எந்த விதமான ஆதங்கமும் இல்லை.

“பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் மயக்க மூட்டும் ஒளி. இதனால் மகிழவே கூடாது என்பதல்ல. அது முடியாத காரியம். இதனால் மயக்கமடைந்து விடக்கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான் புகழுரைக் கேட்கும்போது, தூற்றுபவரும் உள்ளனர் என்பதை மறவாமலிருக்க வேண்டும். புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மனமயக்கம் ஏற்படாது” என்றார் அண்ணா.

தற்போது மயக்கத்தில் இருக்கிறார் அமைச்சர். அண்ணாவின் பொன் மொழியைப் படித்துவிட்டு மயக்கத்திலிருந்து அவர் விடுபட வேண்டும். அம்மா குறிப்பிட்டது போல், அ.தி.மு.க.தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும். அ.தி.மு.க. ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமமாகாது என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal