தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் எங்கு வாக்களிக்கிறார்கள், அவர்களுடைய வாக்குசாவடி எது என்பதைப் பார்ப்போம்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார். இதே வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலினும் வாக்களிக்கிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள பிரம்மஞானம் நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிராம பஞ்சாயத்து பகுதியில் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டார். எனவே இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கிடையாது.

அதே போல பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்துவிட்டார்கள். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஊரகப் பகுதியில் வாக்களித்து விட்டார். எனவே இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கிடையாது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகராட்சி 7-வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சென்னை ஆழ்வார்பேட்டை, பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்.

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாலி கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் வாக்களிக்கிறார். ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் அவர் காலை 7 மணிக்கு வாக்களித்துவிட்டு உடனடியாக ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் திண்டிவனம் நகராட்சி 19-வது வார்டு ரொட்டிக்கார தெரு தாகூர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு திருவள்ளுவர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal