நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கும்பலாக சென்று ஓட்டுக்கேட்பதைவிட, காதலர்களை போல தனித்தனியாக சென்று ஓட்டு சேகரிக்கும்படி அமைச்சர் துரைமுருகன் கட்சியினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் குடியாத்தத்தில் நடந்தது. இதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘ முதல்வர் ஸ்டாலின் அகில இந்திய தலைவராக உருவாகி வருகிறார். 25 ஆண்டுகள் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் இருக்கும். இந்த ஆட்சியின் பலன்கள் மக்களுக்கு சென்றடைய நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பளார்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.

ஓட்டு சேகரிக்க செல்லும் போது, கும்பலாக சென்றால், உங்களுக்கு தான் ஓட்டு போடுகிறேன் என்று சொல்லி தலையை மட்டும் வேகமாக ஆட்டுவார்கள். அதை நம்ப வேண்டாம். நீங்கள் கும்பலாக செல்லாமல் காதலர்களை போல தனித்தனியாக சென்று வாக்காளர்களை சந்தித்தால் நமக்கு ஓட்டு கிடைக்கும். சுலபத்தில் வெற்றி பெற்று விடலாம்’’இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal