‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா..?’ என்று தி.மு.க.வினராலேயே விமர்சிக்கப்பட்டர் செந்தில் பாலாஜி. அப்படி விமர்சிக்கப்பட்டவர்களின் பதவிதான் பறிபோனது. இந்த நிலையில்தான் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தி.மு.க. அலுவலகத்தில் கதறியிருக்கிறார்.

கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை 11:30 மணிக்கு, கூட்டணி கட்சியினருடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சு நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ்- எம்.பி., ஜோதிமணி உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது நடந்த பேச்சில், ‘மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி வார்டுகளில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும்’ என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர். கோபமடைந்த ஜோதிமணி, ‘சிறிய கட்சிகளுக்கெல்லாம் வார்டு ஒதுக்கீடு செய்யும் போது, தேசிய கட்சிக்கு குறைந்த இடங்கள் தரலாமா?’ என, பேசினார். இதனால், அவருக்கும், மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிட்டு, ‘நீங்கள் வெளியில் போகலாம்’ என, ஜோதிமணியை பார்த்து கூறியதாக தெரிகிறது. இதில், மேலும் ஆத்திரமடைந்த ஜோதிமணி, கூட்டத்தை விட்டு வெளியேறி, மரியாதை இல்லாமல் நடத்தியதாக, தி.மு.க., அலுவலகத்திற்கு வெளியே நின்று கதறினார்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி, ‘‘ அமைச்சரும், ஜோதிமணியும் பேசிக் கொண்டிருந்த போது, சில நிர்வாகிகள், ‘உங்கள் கட்சியில் ஆட்களே இல்லை’ என, பேசினர். அதன் பின் தான் பிரச்னை ஏற்பட்டது. அப்போது அமைச்சர் ‘கூட்டணி கட்சிகளை பற்றி பேச வேண்டுமானால் வெளியில் போய் பேசுங்க’ என, கூறியதால் ஜோதிமணி வெளியேறினார்’’ என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியோ, ‘‘எம்.பி., ஜோதிமணி புகார் குறித்து, தற்சமயம் எதுவும் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை தவிர, கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமுகமாக பேசி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்’’ என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்தக் கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியினரும் கொந்தளிக்க காரணம் என்ன என்று சிலரிடம் பேசினோம். ‘‘சமீபத்தில் டாஸ்மாக் பார் விவகாரம் வெடித்தது. இதில் பலிகடாவானர்கள் பத்துவருடம் தி.மு.க.விற்காக உழைத்தவர்கள். சமீபத்தில் கூட சங்கராபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜியிடம் உதவி கேட்டு சென்றிருக்கிறார். அவரது பி.ஏ., எம்.எல்.ஏ.வை உதாசீனப்படுத்தியதால், ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ., ‘அமைச்சர்கிட்ட சொல்லீருங்க… எனக்கு எதுவும் பண்ணித்தரவேண்டாம். அவர் பி.ஏ. என்னை மரியாதைக்குறைவாக நடத்துகிறார்’ என அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் கொந்தளித்தாராம்.

ஏன், மூத்த அமைச்சர் கே.என்.நேருவிடம் கூட, மின்சாரவாரியம் தொடர்பாக ஏதாவது கட்சியினர் உதவி கேட்க சென்றால், ‘‘60 கிலோ மீட்டார்தான் கரூர்… தயவு செய்து அங்கே போய் கேளுங்கள் என்று சொல்லிவிடுகிறாராம். மூத்த அமைச்சர்களின் நிலைமையே இப்படி என்றால், ஜோதிமணியின் நிலைமையைப் பற்றி பேசவா வேண்டும்’’ என்றனர்.

‘பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா… யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal