அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று (ஜனவரி 31) மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்தில், ‘‘அரியலூர் மாணவி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி’’ என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அண்ணாமலை தொடக்கத்தில் இருந்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அளித்த கருத்தில், ‘‘மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிக்கான போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்று பாஜகவின் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal