வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” புத்தக வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. ராகுல் காந்தி வெளியிட, ஜோசப் விஜய் பெற்றுக்கொள்கிறார்.
நாடாளுமன்ற அவைகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பான புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் டெல்லியில் ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைகோ ஆற்றிய உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” என்ற 4 பாகங்கள் கொண்ட புத்தக வெளியீட்டு விழா, வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த புத்தகத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பெற்றுக் கொள்கிறார்.
மதிமுக எம்பி துரை வைகோ வரவேற்புரை ஆற்றும் இந்த விழாவில், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஃபரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், சரத் பவார், அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டி.ராஜா, எம்.ஏ.பேபி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மூத்த அரசியல் தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளதாகவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
