‘‘பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருக்கிறார் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான மூர்த்தி. மேலும் ‘‘நினைத்தவுடன் எந்த சொத்தையும் பதிய முடியாது எனவும், இது எதார்த்தமாக நடந்துவிட்டது என அமைச்சர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ எனவும் கூறியுள்ளார்.

மதுரை ஐயர் பங்களா பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்த போது, ‘‘ பழனி முருகன் பாலா தண்டபாணி அறநிலைக்கு சொந்தமான இடத்தை பத்திர பதிவு மூலமாக நில மோசடி நடந்துள்ளது.

எதற்காக இப்படி நடந்தது? யாரெல்லாம் அதற்கு உடனடியாக இருந்தார்கள்? என்பதை பற்றி எல்லாம் சமீபத்தில் பொதுமக்கள் மத்தியில் விவாதங்களாக இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நானும், முன்னாள் பதிவுத்துறை அமைச்சர் என்ற முறையில் கோயில்கள் இடத்தை பதிவே செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட இடம் கோயில் நிலமாக இருந்தாலும், அரசு நிலமாக இருந்தாலும், நீர் நிலை புறம்போக்கு சொத்தாக இருந்தாலும் பதிய முடியாது. இன்று ஒரு சொத்தை பதிய வேண்டும் என்றால் ஒரு டோக்கன் போட வேண்டும். டோக்கன் போடாமல் பதிய முடியாது. இது தெரியாம பதிந்து விட்டார்கள். எதார்த்தமாக நடந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

இந்தப் பதிவு இப்போது நடந்தது. கடந்த காலங்களில் அந்த பிரச்சனை இல்லை. அறநிலையத்துறை இடத்தை யாரும் பதியவில்லை. சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர் கடந்த ஐந்தாண்டு காலம் திமுக ஆட்சியில் தான் என்ன நடந்தது என தான் சொல்லி வருகிறார். ஆனால், இவர்கள் ஆட்சியில் என்ன நடந்தது என சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு கடந்த ஐந்தாண்டில் பதிவுத்துறையில் அமைச்சரே இதை பதியுங்கள், அதைப் பதியுங்கள் என்று சொன்னதை போல் பேசுகிறார்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 516 அலுவலகத்தில் நான் ஆட்களை நியமனம் செய்ததாகவும் அவர்கள் மூலமாக நான் பணம் வாங்குவதாக சொல்கிறார். என் பெயரை குறிப்பிட்டே சொல்கிறார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். பத்திரப்பதிவுத் துறையில் நினைப்பதையெல்லாம் பண்ண முடியாது.

எல்லா பத்திர அலுவலகத்திலும் ரெக்கார்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முதலாக சட்டத்துறையில் தான் பிரச்சனை. அரசு வழக்கறிஞர் போடுவதில் முறைகேடு நடந்துள்ளது. தவெகவைச் சேர்ந்த சகோதரி ஞானசுந்தரி வழக்கு போட்டு உள்ளார். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆனால் அதனை கவனிக்காமல், 60 நாளும் மீடியாவை சந்திக்கிற வேலையை தான் அமைச்சர் செய்து இருக்கிறார். மதுரைக்கு என்ன செய்துள்ளார் அவர்.

முதலைமைச்சர் நிழலாக தான் அந்த அமைச்சர் இருக்கிறார். இரண்டு துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், எல்லா துறைக்கும் பதில் சொல்வார். குறிப்பாக அறநிலத்துறைதுறை கோயிலுக்கு சொந்தமான நிலம் ஒரு செண்ட் இருந்தாலும், எத்தனை ஏக்கர் இருந்தாலும் பதிவு செய்யக்கூடாது என்று அலுவலக பதிவேற்றம் உள்ளது. அதையும் மீறி பதிவு செய்து உள்ளனர். ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்று சொன்னார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 60 அலுவலகத்தில் ரைடு செய்துள்ளனர். 37 லட்ச ரூபாய் கையடல் செய்ததை கண்டுபிடித்தனர்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal