தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், ஆளும் திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன. திமுகவின் படுதோல்வி நிலவரம் அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னிலை நிலவரம் & தமிழகம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
புதுச்சேரி முன்னிலை நிலவரம்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ்: 107, பாஜக: 145, காங்கிரஸ்: 3, இடதுசாரிகள்: 2 என முன்னிலை வகிக்கின்றன.
கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 51, யுடிஎஃப் கூட்டணி: 84, என்டிஏ கூட்டணி: 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 94 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 30, பிற கட்சிகள்: 1 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இந்தமுறை 4 முனைப் போட்டி நிலவியது. புதிதாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தவெக, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பு வரை தவெகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காகது என்றே கணிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் தவெக ஒரு கேம் சேஞ்சர் என்ற வகையில் அணுகப்படுகிறது.
இந்த நிலையில் திமுக ஆட்சியைத் தக்க வைக்குமா?, கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சி அமைக்குமா? இல்லை யாரும் எதிர்பாராத பலத்துடன் தவெக அரசியல் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், தமிழகத்தில் தவெகவின் எழுச்சி பேருபொருளாகிறது.
