அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் (ஏப்.22) நிறைவடைகிறது. இந்த சூழலில் ட்ரம்ப் இதனை நீட்டித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். “ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும் வரையில் இந்த போர் நிறுத்தம் தொடரும். அதே நேரத்தில் ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நான் கூறியுள்ளேன்,” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வரவேற்றுள்ளார். இருப்பினும் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் செல்ல இருந்த திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதை ஈரான் நிராகரித்து வருகிறது.

முன்னதாக, ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லியிருந்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கமளித்தார். ஈரானோடு ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லை என்றால் மீண்டும் தங்கள் தரப்பு தாக்குதலை தொடங்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal