தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் வாழை இலையில் பிரியாணியுடன், ‘பீர்’ கொடுக்கப்பட்ட சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் “பீர்” மதுபானம் பரிமாறப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும், போதையின் பாதையில் திமுக யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடுகள் நம்மை விட்டு கொஞ்சமும் நீங்கவில்லை. அதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் “பீர்” மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, “போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்” என்று விளம்பர வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?. அதுவும், ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் தான் பீர் வழங்கப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன.
திமுக எம்.எல்.ஏ.வுக்கும், திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று சொல்லப் போகிறாரா ஸ்டாலின்?. தன் கட்சியின் அயலக அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், சர்வதேச போதைப்பொருள் மாபியா தலைவனாக செயல்பட்டு வந்தது பற்றியே இன்று வரை இந்த பொம்மை முதல்-அமைச்சர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லையே?
திமுகவிற்கும் போதைப் பொருட்களுக்குமான தொடர்பையே விளக்க முடியாத இவரா, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பார்? வாய்ப்பே இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, போதையின் பாதையில் திமுக யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம். போதைப்பொருள் புழக்கம் ஒழிய, இந்த திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் நல்லாட்சி அமைவதே ஒரே வழி’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.