நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியல் பல்வேறு குற்றச்சாட்டுகள் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பின் ‘தொகுதி பிரச்னை’ சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அருண் நேரு எம்.பி., சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன், சகோதரர்களின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்கள் என சென்னை, திருச்சி, கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அமைச்சர் நேருவின் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை தொடர்பாக கடந்த ஏப்ரல் 11ம் தேதி, அறிக்கை வெளியிட்டுள்ள அமலாக்கத் துறை,

“கடந்த 07/04/2025 அன்று சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத் துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002ன் கீழ் M/s Truedom EPC India Pvt Ltd நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய ரூ. 30 கோடி கடன் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக M/s Truedom EPC India Pvt Ltd உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

காற்றாலை தொடர்பான எந்த முன் அனுபவம் இல்லாத இந்த நிறுவனம், 100.8 MW மின்சாரம் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதாக போலியாக ஒப்பந்தம் போட்டு கடனை பெற்று தவறாக பயன்படுத்தியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும் இந்த நிதி பிரிக்கப்பட்டு, இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய M/s True Value Homes Pvt Ltd மற்றும் M/s TVH Energy Resources Pvt Ltd ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை சோதனையின் போது பணத்தை மோசடியாக பயன்படுத்தியதற்கான ​​பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக என். ரவிச்சந்திரன் மற்றும் அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நபர்கள் நிதியை மாற்றி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சான்றுகள் கூறுகின்றன.

கூடுதலாக, இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவண சான்றுகள் மூலம், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைக்குள் (MAWS) ஊழல் வலையமைப்பு வேரூன்றியிருப்பது தெரியவருகிறது.

மாநிலம் முழுவதும் ஏராளமான ஹவாலா பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் வசூலித்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊழல் வலையின் முழு நோக்கத்தையும் கண்டறிந்து, அதன் விளைவாக பொது கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பைக் கணக்கிட தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தின் மூலம் சொத்துகள் மற்றும் சேர்க்கப்பட்ட வருமானம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியான நிலையில், அதற்குமேல் இந்த விவகாரம் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு சந்தித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

தொகுதி பிரச்னைகள் சம்பந்தமாக சந்தித்தாலும், தலைமையின் அனுமதியுடன் அருண் நேரு சந்தித்தாரா? அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு அருண் நேரு சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal