தி.மு.க.வில் உள்ள சீனியர் அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிதித்து வேலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

திமுகவின் மூத்த தலைவராக இருப்பவர் துரைமுருகன். இவர் திமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார். அந்த சமயத்தில் கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இடம்பெற்றிருந்தார். துரை முருகனுக்கு பொதுப்பணித்துறையை கருணாநிதி வழங்கியிருந்தார். இந்நிலையில் தான் 1996-2001 காலக்கட்டத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அவர்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு கடந்த 2007 ம் தேதி வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. துரைமுருகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் சொத்துக்களையும் சேர்த்து தான் அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவறான ஒன்றாகும் என்று வாதிட்டனர்.

அதேபோல் அரசு தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கலான குற்றப்பத்திரிகை அடிப்படையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி மாதம் ஒத்திவைத்தது. இதையடுத்து தான் வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இதனால் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிப்பார்களா? இல்லாவிட்டால் சிக்கலை எதிர்கொள்வார்களா? என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal