காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

‘‘பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைப்பார்.’’ தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும் வலிமைக்கும் ஊரு விளைவிக்கும் வகையில் நடக்கப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதல் சகித்துக் கொள்ள முடியாது. மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்திய மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை உலக நாடுகள் கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தீவிரவாதிகளை ஊற்றி வைக்கும் பாகிஸ்தான் அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

உலக நாடுகளின் அமைதிக்காகவும், உலக மக்களின் நன்மைக்காகவும் பல குறிப்பிடத்தக்க சிறந்த அம்சங்களை முன்னெடுத்துச் சென்று, உலகின் தலைசிறந்த அமைதியை விரும்பும் வல்லரசாக திகழ்ந்துவரும் இந்திய தாய் திருநாட்டிற்கும், உலகத்திற்கே வழிகாட்டியாக உலகத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் செயல்பாடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுபோன்ற மனிதநேயமற்ற பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இனியாவது தேசப்பற்றுடன் செயல்பட வேண்டும்.

மக்கள் நலனில் உலகத்திற்கே உதாரணமாக செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசை தொடர்ந்து குறை சொல்லி, மக்களை குழப்பி இந்திய மக்களை மதவாத, வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு இந்திய மக்களுக்கு எதிராக நடந்து கொள்வதை இந்த கடுமையான காலகட்டத்தில் உணர்ந்து, அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் வாக்குகளுக்காக கீழ்த்தரமாக செயல்படாமல், ஒரே நேர்கோட்டில், இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வழு சேர்க்கும் வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு துணையாக செயல்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal