அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை நிறைவடைகிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘‘தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர் (டிசிசி) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. www.arasubus.tn.gov.in என்ற இணைய தளத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான அவகாசம் நாளை (ஏப்.21) நிறைவடைகிறது. பணிக்கான தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை, செல்லத்தக்க நடத்துநர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.590. மற்றவர்களுக்கு ரூ.1,180. அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகின்றன. இது குறித்து அரசு முடிவு செய்யும். விண்ணப்ப பதிவு முடிந்த பிறகு, எழுத்து, செய்முறை தேர்வுகள், நேர்காணல் மூலம் தகுதிவாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட இணையதளத்தில் தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப் போது வெளியாகும்’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal