திருச்சி அ.தி.மு.க. கரைந்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி கவனித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்று குமுறுகின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்து வீறுநடை போட்டவர் ஜெயலலிதா. அவர் மறைவிற்குப் பிறகு முத்தரையர்கள் அதிகம் வசிக்கும் திருச்சி மாவட்டம் 2021ல் தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிட்டது. இந்த நிலையில்தான், இதே நிலை நீடித்தால் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திருச்சி மாவட்டம் அ.தி.மு.க.வை விட்டுப் போய்விடும் என்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இது பற்றி நடுநிலையான மூத்த அ.தி.மு.க.வினர் நம்மிடம், ‘‘சார், மேல சொன்னது அனைத்தும் உண்மைதான். உதாரணமாக, நேற்று நீட் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால், திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சில நூறு பேரே கலந்து கொண்டனர். மூன்று மாவட்டச் செயலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டமே இந்த லட்சணத்தில் நடந்திருக்கிறது. காரணம், மலைக்கோட்டை மாவட்ட ‘குறுநில’ மன்னரிடம் சில மாவட்டச் செயலாளர்கள் ரகசிய தொடர்பில் இருக்கின்றனர். இந்த விவகாரம் தெரிந்துதான் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கண்டித்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி கண்டிப்பிற்கு பிறகும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருந்தியதாக தெரியவில்லை. குறிப்பாக ஒன்றியச் செயலாளர்கள் யாரும் மா.செ.க்கள் பேச்சை கேட்பதில்லை. மா.செ.க்களும் ஒன்றியச் செயலாளர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை. இப்படிப்பட்ட நிலைதான் திருச்சி மாவட்டத்தில் நீடிக்கிறது.

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், முத்தரையர்கள் அதிகமாக வசிக்கும் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. ஆனால், அங்குள்ள ஒன்றியச் செயலாளர்கள் இன்றைக்கு கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு, அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே தி.மு.க.விற்கு வேலை செய்கின்றனர். அதனால்தான், மண்ணச்சநல்லூர் தொகுதியில் பெரம்பலூரில் இருந்து வந்த வேட்பாளர் ‘விட்டமினை’ இறக்கி வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்தும் நான்தான் வெற்றிபெறுவேன் என்று அடித்துக் கூறி வருகிறாராம்.

‘இது ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் போல…’ மாற்ற ஒன்றியங்கள் மற்றும் நகரங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் குறுநில மன்னரையே தோற்கடிக்கச் செய்தவர் ஜெயலலிதா… அப்படி வலிமையாக இருந்த அ.தி.மு.க. இன்று வலிமை இழந்து காணப்படுவதற்கு மா.செ.க்களும், ஒ.செ.க்களும்தான் காரணம்.

எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டித்த நிலையிலும், இன்னும் தி.முக.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்கள் திருச்சி அ.தி.மு.க.வினர். ஒன்று… மா.செ.க்கள், ஒ.செ.க்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும். இதுதான் இன்றைக்கு திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வின் நிலையாக இருக்கிறது’’ என்றனர்.

திருச்சியில் கரைந்து வரும் அ.தி.மு.க.வை கரை சேர்ப்பாரா எடப்பாடி பழனிசாமி என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக திருச்சி அ.தி.மு.க.வில் புதியவர்களுக்கும் வழிவிடுவதில்லை… ‘வலிமை’யோடு இருக்கும் சீனியர்களையும் கண்டுகொள்வதில்லை என்ற சத்தமும் திருச்சியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஆத்தூர் இளங்கோவன்தான் என்று ஒரு தரப்பினர் கைகாட்டுகின்றனர்.

‘‘எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..!’’

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal