2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் விஜய், நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடைய ரசிகர்களின் வாக்குகளை குறி வைத்தும் காய் நகர்த்தி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கியது முதலே அவரது நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளாலும், தமிழக மக்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுகவும், பா.ஜ.க.வுமே தவெகவின் முறையே அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் என்று மிகவும் திட்டவட்டமாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
அரசியல் மாநாடு, முதல் பொதுக்குழு கூட்டம் என கட்சியின் அடிப்படை பணிகளில் பரபரப்பாக இயங்கி வரும் அவர் நேற்று தவெக-வின் ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்தியாவிலே மிகப்பெரிய சமூக வலைதள படை தவெக-வின் ஐடி விங் என்றும், அவர்கள் மெய்நிகர் போராளிகள் என்றும் இதனால் சமூக வலைதளங்களில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நடிகர் விஜய் இவ்வாறு அறிவுறுத்தியதன் பல முக்கிய காரணங்கள் உள்ளது. நடிகர் விஜய் கூறியது போல அரசியல் கட்சிகளை விட சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யின் ரசிகர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம் ஆகும். அது நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பலம் ஆகும். ஆனால், அதே பலம்தான் அவருக்கு பலவீனமாகவும் இருக்கிறது.
ஏனென்றால், தமிழ் சினிமாவின் தொடக்க காலம் முதலே எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்கள் மோதல், ரஜினி – கமல் ரசிகர்கள் மோதல், விஜய் – அஜித் ரசிகர்கள் மோதல் தொடர்ந்து கொண்டு வருகிறது.
தற்போது சமூக வலைதளங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில் உச்சத்தில் உள்ள விஜய் போன்ற நடிகரின் ரசிகர்கள் பிற நடிகர்களின் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் மல்லு கட்டுவதை தொடர்ந்து வருகின்றனர்.
மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இதுபோன்று விஜய் ரசிகர்கள் உள்பட மற்ற நடிகர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் தற்போது வரை நடிகர்களாகவே உள்ளனர். விஜய் மட்டுமே அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்த பிறகும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாதம் செய்வதும், அவர்களை தகாத வார்த்தையில் இழிவாக பேசுவதும், அவர்களுடன் சமூக வலைதளங்களில் சண்டையிடுவதும் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, நடிகர் விஜய் அளவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுடன் தற்போது வரை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் சிலர் சண்டையிட்டு வருவது தவெக-வின் வளர்ச்சியையும், வாக்கு சதவீதத்தையும் மிக கடுமையாக பாதிக்கும் என்பதே நிதர்சன உண்மை.
ஏனென்றால், கடந்த காலத்தில் அஜித் ரசிகர்களுடனான மோதல் என்பது மாறி ரஜினி ரசிகர்களுடனான மோதலாக உருவெடுத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின் வாக்குகளுடன் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் மிக மிக அவசியம் என்பதை தவெக தலைமை உணர்ந்துள்ளது. இந்த நேரத்தில் ரசிகர்களும், சில கீழ்மட்ட நிர்வாகிகள் இன்னும் ரசிகர்கள் சண்டையைத் தொடர்ந்தாலோ, தரம் தாழ்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தாலோ அதுவே கட்சிக்கு பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை விஜய் நன்கு உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாகவே, சமூக வலைதளங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். மேலும், திமுக – பா.ஜ.க. ஆகியோர் பற்றிய குறைகளை மக்கள் மத்தியில் அதிகளவு எடுத்துச் செல்லவும் கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் விஜய் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் தன்னுடைய மகளிடம் ‘நீ யாரோ ரசிகைமா?’ என கிளைமாக்ஸில் கேட்பார் விஜய். அப்போது அவர் ‘தல’ எனக்கூறி தப்பிப்பார். இது அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. தவிர, நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் மறைமுக அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருப்பதும் விஜய்யை சிந்திக்க வைத்திருக்கிறது என்கிறார்கள்.