குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேற்று சந்தித்து பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அத்துடன், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிப்பதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே, கடந்த ஏப்.17-ம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ரவி நேற்று சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்ததை துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஜெகதீப் தன்கர் – ஆளுநர் ரவி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சந்திப்பின்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.