ம.தி.மு.க.வில் மல்லை சத்தியாவுக்கும், துரைவைகோவுக்கும் பனிப்போர் வெடித்த நிலையில், மல்லை சத்தியாவுக்கு ஆதரவாக வைகோ அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ம.தி.மு.க.,வின் முதன்மை செயலாளர் பொறுப்பில் விலகுவதாக துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ, ‘‘அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018ம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன்.

வைகோவுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. கட்சி தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன்.

கொரோனா காலத்தில் மீண்டும் வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்போது தான் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை.

நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டசபை தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சியினரும், சாத்தூர் தொகுதி மக்களும் , அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன்.

ம.தி.மு.க., தமிழக அரசியலில் வலிவும், பொலிவும் பெற வேண்டும் என அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இத்தகைய சூழ்நிலையில், தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் 4 ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை.

எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். நாளை 20ம் தேதி நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன். ம.தி.மு.க.,வின் தொண்டனாக கடைசி வரை இருப்பேன்’’ இவ்வாறு துரை வைகோ கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal