‘‘தமிழகத்தில் ஆளும் அமைச்சர்களுடன் திருச்ச்சி மாவட்ட அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது; திருச்சி மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார்.

அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கணொளி காட்சி மூலம் இன்று கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர், ‘‘கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கிறது என்பது குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொறுப்பாளர்களை உடனடியாக நியமித்து சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’’ எனப் பேசியிருக்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ‘‘திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திமுக அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அந்த தொடர்புகளை எல்லாம் மறந்துவிட வேண்டும். கடந்த காலங்களில் திருச்சி மாவட்டம் அ திமுகவின் கோட்டையாக இருந்தது. அதே நிலைமையை வரும் சட்டமன்ற தேர்தலில் உருவாக்க வேண்டும். இதற்காகத் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றியாக வேண்டும். அவ்வாறு கட்சி விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படாத கட்சி நிர்வாகிகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என பகிரங்கமாக எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி திருச்சி அ.தி.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தி.மு.க. அமைச்சரிடம் விலைபோய்விட்டனர். காரணம், அமைச்சரின் மகன் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். தொகுதி பெரம்பலூராக இருந்தாலும், திருச்சி புறநகர் மாவட்டத்தின் பகுதிகள்தான் இதில் அதிகம் இடம் பெறுகிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், மாநகர் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகியே தொழில் ரீதியாக தி.மு.க. குடுபத்துடன் மறைமுகமாக உறவு வைத்திருக்கிறார். தவிர, திருச்சியின் ‘பவல் ஃபுல்’ மந்திரியிடம் அக்கட்சி ஒன்றியச் செயலாளர்களே நேரடியாக பேசுவதற்கு தயக்கம் காட்டுவார்கள்-. ஆனால், அ.தி.மு.க. ஒ.செ.க்கள் ‘மாமா’ என்று உரிமையுடன் அழைப்பார்களாம். ‘பவர்ஃபுல்’ மந்திரியும் இவர்களது அழைப்பை உடனே எடுத்துவிடுவாராம்.

இப்படி இருந்தால், அ.தி.மு.க. எப்படி திருச்சியில் வெற்றி பெறும். கட்சிக்கு உண்மையாக இருக்காத ஒன்றிய, நகர நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகும் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியின் 2026 கனவு நனவாகும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal