எஸ்.பி.வேலுமணியுடன் அம்மன் அர்ஜுனன்…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய உறவு இருக்கிறது என டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கூறிவந்த நிலையில்தான் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியைக் காட்டியிருக்கின்றனர்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அ.தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், தன் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

இது, அவரது வருவாயைக் காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். இதற்கிடையே, கோவையில் இன்று காலை முதல் அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பக்கம் ‘மேலிடம்’ நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மறுபக்கம் தமிழக அரசும் ‘நெருக்கடி’யை கொடுத்து வருகிறது. மத்தளத்திற்கு இரண்டுபக்கமும் அடி என்பதுபோல எடப்பாடி பழனிசாமியின் நிலை இருக்கிறது. ஆக மொத்தத்தில் தி.மு.க.வின் ‘கொங்கு ஆபரேஷன்’ ஸ்டார்ட் ஆகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal