நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து சமீபகாலமாக ஒதுங்கியிருந்த காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காளியம்மாள் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
‘‘இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையும் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியாக பல அனுபவங்களை கொடுத்துள்ளன. பல உறவுகள் அண்ணன், தம்பிகளாகவும், அக்கா, தங்கைககளாகவும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.
பழகிய விதங்களை எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவுதான். தமிழ்த் தேசியத்தின் வெற்றியும், அதை மக்களிடம் கொண்டு சேர்த்தல் எனும் உன்னத நோக்கமும் ஆகும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் பெருமை கொள்கிறேன்.
கடந்த 6 வருட காலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லார் அன்பாலும் நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது. மிகவும் வருத்தத்துடன் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு பயணித்ததில் அன்பு, அக்கறை, நம்பிக்கை என் மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் நிலைநிறுத்தியுள்ளேன். என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என் மீது மிகுந்த நம்பிக்கையும், அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துனை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள். என்க்கான நெருக்கடிகள் நிறைய வந்தபோதும் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன்.
ஆனால், இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில் என் மீது அளப்பிரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தை தரலாம். எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல். என்றும் தமிழ் தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்’’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
‘‘என்றும் தமிழ் தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்’’ என அறிவித்திருக்கும் காளியம்மாள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!