ஒரு பக்கம் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனை மூலமும், மறுபக்கம் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அ.தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ‘‘இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்’’ என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழக்தில் நடக்கும் தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை.
நாடறிந்த ஊழல் திலகங்களான இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்னைகளையும், அதனை சரி செய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசை திருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.
அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அ.தி.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன்Knee Jerk Reaction தான் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள அம்மன் அர்ஜூனன் திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது. தீயசக்தி தி.மு.க., தெரிந்து கொள்ளட்டும். இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம். 2026ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!’’ இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.