இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) சேலத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வரும் 26-ம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் இருப்பேன். அப்போது, துணை முதல்வர் உதயநிதி கேட்டபடி சென்னை அண்ணா சாலைக்கு தனி ஆளாக வருகிறேன். எந்த இடத்துக்கு, என்ன நேரத்தில் வர வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.
திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று டிரென்டிங் செய்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் தளத்தில் பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக டிரென்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்.” என சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) அவர் பதிவு செய்துள்ளார்.