சடலத்துடன் உடலுறவு கொள்வதை பாலியல் வன்முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்ட கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் ஆசைக்கு இணங்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டார். அவர் மீது கொலை செய்ததற்கான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302, பலாத்காரம் செய்ததற்காக 375 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவானது.
விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்றம் 302வது பிரிவில் ரங்கராஜிக்கு தண்டனை விதித்தது. ஆனால் சடலத்துடன் உறவு என்பது பிரிவு 375ன் கீழ் பலாத்காரம் ஆகாது; 377ம் பிரிவு இயற்கைக்கு மாறான உறவின் வரம்பில் வராது. பிரிவு 375, 377ஐ கவனமாக படித்தால், இறந்த உடலை மனிதன் அல்லது நபர் என்று அழைக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தது. பலாத்கார வழக்கில் இருந்து ரங்கராஜ் விடுவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து 2023ல் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நேற்றும், மனு மீது விசாரணை நடந்தது.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அமன் பன்வார் வாதாடுகையில், ‘‘இறந்த ஒருவரால் பாலியல் செயல்களுக்கு சம்மதிக்க முடியாது என்பதால், சடலத்தை பலாத்காரம் செய்வதை, பிரிவு 375ன் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த பிரிவில் உடல் என்ற வார்த்தையையும், இறந்த உடல் என்று கருத வேண்டும். பிரிவு 375ஐ ஆழமாக சென்று பார்க்கக் கூடாது. இறந்த உடல்களுக்கு, கண்ணியமும், நியாயமும் வழங்கப்பட வேண்டும்’’ என்றார். அடுத்து, பிரதிவாதி தரப்பில் அவரது வக்கீல் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘ இந்த பிரச்னையை பாராளுமன்றம் ஆராய வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரலாம். இதுதொடர்பாக அரசு, பாராளுமன்றத்திற்கு கடிதம் எழுதலாம்.
சடலத்துடன் உறவை குற்றமாக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. பிரிவு 377ல் திருத்தம் செய்ய வேண்டும்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நீதிமன்றம் உட்பட சர்வதேச நீதிமன்றங்கள் சடலத்துன் உறவு கொள்வதை பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் கொண்டு வர தண்டனை சட்டத்தின் பிரிவுகளை விரிவுபடுத்தி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. இதனால் கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.