அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் பறிமுதல் செய்த செல்போன்களை பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை, ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, எஃப்.ஐ.ஆர் லீக் ஆனதன் அடிப்படையில் பத்திரிகையாளர் களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக, இந்த அழைப்பாணையை பத்திரிகையாளர்களின் செல்போன்களுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் காவல்துறை அனுப்பி வருகிறது. இருந்தபோதும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிகையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர். அவ்வாறு விசாரணைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்தது சர்ச்சையானது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் பத்திரிகை யாளர்களின் செல்போன்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அத்துடன் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும், முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்தது யார்? பத்திரிகை யாளர்களுக்கு 3 முறை சம்மன் அனுப்பியது ஏன்?. முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரையெல்லாம் விசாரித்தீர்கள். கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.