முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தண்டிக்கப்பட்ட அவர், உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். 2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட்டது. ஆனால், மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவில் நடந்ததால், அவர் பயன்படுத்திய 27 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள், நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்தப் பொருட்கள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளன.

ஜெயலலிதாவின் இந்த உடைமைகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கக்கோரி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று (ஜனவரி 29) நீதிபதி எச்.வி. மோகன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு…

  • 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும்.
  • உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து செல்ல வேண்டும்.
  • பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
  • சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்ரவரி 14, 15ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal