தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது ‘லைட் டூட்டி’ தேவையா? என கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

2018 ஆண்டு ரூ. 24,718 கோடியாக இருந்த தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் 2022-இல் ரூ.48,478 கோடியாக அதிகரித்தது என்று இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு பற்றிய இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரின் (Comptroller and Auditor General) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2017 முதல் 2022 வரை தொடர்ந்து நஷடத்தை சந்தித்துவரும் தமிழக போக்குவரத்து கழகங்களின் நஷ்டம் 2022 இறுதியில் ரூ.48,478 கோடியாக உள்ளது.

2024ம் ஆண்டு கணக்குப் பார்த்தால் அரசு போக்குவரத்துக் கழகம் இன்னும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சரி, இப்படி நஷ்டத்தில் இயங்கும் அரசுபோக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் இயக்காவிட்டாலும் நஷ்டத்தை குறைக்கவாவது வழிவகை செய்யவேண்டாமா? இது பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களிடம் பேசினோம்.

‘‘சார், ஏற்கனவே அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் மகளிருக்கு இலவசம் கொடுத்தது மேலும் கடன் சுமையை சுமத்தியிருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இதெல்லாம் நடக்கிறது. ஒரு பக்கம் இலவசத்தை கொடுத்துவிட்டு மறுமக்கம் மக்களிடம் ‘வரி’ மூலமாக வசூல் செய்வதை அடித்தட்டு மக்கள் உணருவதில்லை.

தவிர, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் சில முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதிலும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நஷ்டம் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு பணிமனைக்கு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் ‘லைட் டூட்டி’ (அதாவது வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால், தி.மு.க. ஆட்சியில் ஒரு சிறிய பணிமனையில் கூட தலைவருக்கும், செயலாளருக்கும் ‘லைட் டூட்டி’ (அதாவது பேருந்துகளை இயக்காமல் அலுவலகத்திற்கு சென்று வந்தால் போதும் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம்)!

தவிர, இந்த தலைவர், செயலாளர்களை கவனித்தால்தான், ‘இலகுவான’ பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அதாவது, அன்றைய தினம் காலையில் பணிக்கு சென்றுவிட்டு, அன்றைய தினம் இரவே பணி முடியும். இது இரண்டு நாட்களுக்கு வேலை பார்த்ததற்கு சமமாகும்.

தலைவர், செயலாளர்களை கவனிக்காதவர்களை சென்னை பேருந்துகளை இயக்குவதற்கு அனுப்பிவிடுவார்கள். தவிர, தினம்தோறும் இவர்களுக்கு ‘மது’ விருந்தும் கொடுத்தாகவேண்டும். உண்மையிலேயே சொல்கிறோம்… நீங்கள் ஒரு பணிமனையில் பணிபுரியும் சாதாரண ஒட்டுநரிடம் அவர் படும் கஷ்டங்களை கேட்டுப்பாருங்கள்… அப்போதுதான் உங்களுக்குப் புரியும்…’’ இப்படி உயிரைப் பிடித்துக் கொண்டு பேருந்துகளை இயக்கி ஓய்வு பெற்ற பிறகு, எங்களால் உடனடியாக ஓய்வு பலன்களை பெறமுடிவதில்லை. எனவே, தமிழக அரசு அரசு போக்குவரதுக் கழகங்கள் மீது தனி கவனம் செலுத்தவேண்டும்’’ என்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகமே நஷ்டத்தில் இயங்கும்போது ஒரு பணிமனைக்கு இருவருக்கு ‘லைட் டூட்டி’ கொடுப்பது மேலும் நஷ்டத்திற்கு வழிவகை செய்வதுதானே..? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal