ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ,வி,கே,எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு பிப்.5ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஓட்டுகள் பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் வெளியிடப்படுகின்றன.
இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. பா.ஜ., தே.மு.தி.க.,வும் தேர்தல் களத்தில் இருந்து விலகி விட்டன. தி.மு.க., வேட்பாளராக வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.
வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு இன்று (ஜன.20) பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்தல் களத்தில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணிசார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், பிறகு எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில்தான் அவரும் தற்போது வேட்புமனுவை வாபஸ் வாங்கியிருக்கிறார்.